திங்கள், 26 செப்டம்பர், 2016

காதல் கடிதம் : கவிதை



அனுப்புனர் –
சோ.விமலன்,
S/o நா.சோலைமலை, திண்டுக்கல்-624003,

பெறுநர் -
அப்பா ,
????,
????.

அன்புள்ள அப்பா,

இது மகன் தந்தைக்கு எழுதும் ஒரு காதல் கடிதம் ,
ஆனால்
கடிதத்தை பெற அவர் இல்லாததால் இது ஒரு கானல் கடிதம்...!

கடன் தொல்லையால் நீ செய்து கொண்டாய் தற்கொலை..!
உன்னுடைய பிரிவை விவரிக்க நான் தேடுகிறேன் சொற்களை..!

பணம் இல்லாத காரணத்தால் நீ ஒரு கடனாளி..!
நீ இல்லாத காரணத்தால் கண்ணீரில் கழிகிறது என் நாழி..!

நீ என்னை ஒரு போதும் திட்டியதில்லை கோவமாக..!
அதனால் தான் உன்னுடைய இழப்பு எனக்கு ஆனது சாபமாக..!

நீ நினைத்திருந்தால், ஓடி இருக்கலாம் மதுவின் மயக்கம் தேடி,
வாடி இருக்கலாம் புகையின் பூரணம் பாடி..!
ஆனால்
நீ ஓடியதோ குடும்பத்தின் இன்பத்தை காக்க,
நீ வாடியதோ குடும்பத்தின் கடனை போக்க..!

உண்ண மறந்தாலும் உழைக்க மறக்காத ஒரு பிறவி..!
உன் பிரிவால் உண்ணாமல் உழைக்காமல் இருக்கிறாள் உன் இறைவி..!

நான் பெருமையாகக் கூறுவேன் நான் ஒரு உழைப்பாளியின் மகன் என்று,
அதற்கு நீ தட்டிக் கொடுக்க வேண்டும் என் அருகில் நின்று..!

இல்லை என்று வருபவரிடம் இல்லை என்று சொல்லாத ஒரு நல்ல குணம்..!
நீ இம்மண்ணை விட்டு பிரிகையுள் உன்னிடம் இருந்தது 11 ரூபாய் பணம்..!
நீ செய்த தர்மமும் உன் தலையைக் காக்கவில்லை
நீ செய்த புண்ணியமும் உன் கணக்கில் சேர்க்கவில்லை..!

18 ஆண்டுகள் சபரிமலை சென்றதால் நீ குருசாமி..!
ஆனால்
உன்னுடைய உயிரை காக்கவில்லை ஒருசாமி..!

நான் இந்த கடிதத்தை கண்ணீர் வராமல் எழுத நினைத்தேன், ஆனால் என்னால்
முடியவில்லை..!

எனக்கு பெயர் வைத்த என் தந்தைக்கு இதை அனுப்ப பெறுநர் முகவரி எனக்கு
தெரியவில்லை..!


இப்படிக்கு,
கண்ணீருடன் காதலன்.


எழுதியது - சோ. விமலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக