தூய
மண் வாசனையை உணர்த்துகின்ற காற்றில் தன் பெயரை அவைகளே அழைக்கும்
பிரம்மையோடு நடந்து செல்லும் இவன், செழியன். தன்னை வரவேற்கும்
தோற்றத்தில் பிரம்மாண்டமாய் நிற்கும் தென்னை மரங்களும், தாரில்லாத செம்மண்
சாலையும், சற்றே கடந்ததும் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தியும், குளத்தில்
துணி துவைக்க வரும் பெண்களும், மீன் பிடித்து விளையாடும் சிறுவர்களும்
அவன் மனதில் ஒரு புதுவிதமான மகிழ்ச்சியையும், கடந்தகால நினைவுகளையும்
ஏற்படுத்துவதை உணர்ந்தான். எத்தனை கோடி இதற்கு இணையாக முடியும் என்று
எண்ணிய அவன் மனதுடன் சேர்ந்து, கண்களும் கலங்கின. கணநேரத்தில் சற்று
தூரத்திலிருந்து ஒரு குரல். பெரியவர் ஒருவர் அருகில் வந்து,
'என்ன காள ரெம்ப நேரமா எதியோ தொலச்சமாரி, தொலவிக்கிட்டே இருக்கீங்களே. எதாச்சும் காணமா சாமி'
'ஆமாங்கய்யா. மண்ணையும்,
மனுச மக்களையும் தொலைச்சிட்டேன்' என்று மனதில் கூறிக் கொண்டவனாய்,
'செண்பகம் பாட்டி வீடு எங்க இருக்குங்கய்யா?' என்ற கேள்வியையே பதிலாய் வைத்தான்.
ஆம்,
செழியனின் பாட்டி செண்பகம், தாத்தா செல்லப்பன். அவனுடைய அம்மா, அப்பா
இருவரும் 20 ஆண்டுகளுக்கு முன் வந்த வெள்ளப் பெருக்கில் அடித்துச்
செல்லப்பட்டனர். அப்போது செழியன் 10 வயதைக் கடந்திருக்கக் கூடும்.
வயல்கள், ஆடு, மாடுகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி அழிந்தன. பசி,
பட்டினியால் அவதிப்பட்ட காலமது. பசியின் வேகம் ஈட்டியை விட ஆழமாகவே மனதில்
பல எண்ணங்களை பாய்ச்சியிருந்தது. நெல் விளையவில்லை, பழங்கள் இல்லை என்ற
வெறுப்பு பசியின் உச்சத்திலிருந்த அவனுடை
ய
கோபமே, அந்த மண்ணைவிட்டு இவ்வளவு காலம் பிரித்து வைத்திருந்தது போலும்.
பாவம், பிஞ்சுக் குழந்தைக்கு அப்போது தெரியவில்லை மண்ணின் அருமை.
12 முடிந்தது. மேலே படிப்பதற்கு வெளியூர் செல்ல அடம் பிடித்து,
'பாட்டி நான் இங்க இனி இருக்கமாட்டே. வேற எங்கயாச்சு போயி படிச்சுக்கிறே. என்ன வேற ஊர்ல படிக்க வையி'
'என்ன ராசா ஒனக்கு இல்லாமயா?',
என்று பாட்டி எல்லாவற்றையும் விற்று, அனுப்பி வைத்தாள் பாட்டி.
சுதந்திரக்
காற்றை சுவாசிக்கின்ற பெருமிதமான சந்தோசத்துடன் பட்டினம் சென்றான்.
படித்தான். வீட்டின் சிறு நினைவுகள் கூட வந்து போகவில்லை என்றே
சொல்லலாம். மனதில் பட்ட பல ஆசைகளும் நிறைவேறவே இந்த சுதந்திரக் காற்றே
வாழ்நாள் முழுதும் வேண்டும் என்றெண்ணிய அவன், அந்த காற்றின் தூய்மையை அறிய
முற்படாதவனாய் வாழ்வின் அடுத்த படியினை ஏற தயாரானான்.
புதிய
இடம், முதல் வேலை, மனதில் படபடப்பு, பார்க்கும் இடமெங்கும் பரபரப்புடன்
வேலை பார்கும் கணிணிகள், யாரையும் பொருட்படுத்தாமல் அங்குமிங்கும் ஊர்ந்து
கொண்டிருக்கும் இருபாலர்களின் புதிய பார்வை. இவை அனைத்தும் கொடுத்த
அச்சத்தை மட்டுமே வாங்கிக் கொண்டவனாய் திகைத்து நின்றான்.
நாட்கள்
பலவும் இப்படியும் அப்படியுமாய் ஓட, தன் திறமைக்குரிய இடத்தையும் அடைந்த
கர்வத்தோடும் வாழ்க்கையை கடந்து கொண்டிருந்தான். இல்லை என்ற சொல்லை
மறந்தவனாய், தனிமையே இனிமை என்றவனாய், சூரியனும் என் கையில் என்றவனாய்
திரிந்தான்.
வருடங்கள் பல
கழிந்தன.
திடீர்
திருப்பமாய், செழியனின் பொருள் செழிப்பு குறையவில்லை என்றாலும், அவன் உடல்
அதற்கு நிகராய் இல்லை. நாட்கள் கடக்கவே அன்பின் அருமையும், மண்ணின்
செழுமையும் ஒருவாறாக மனதினைத் தொட்டுவிட்டே போனது. உச்சந்தலை முதல் பாதம்
முடிய தாய் கிராமத்தை நோக்கியே இழுத்துக் கொண்டிருந்தன.
'சார், சார் கீழே பாத்துப் போங்க',
ஓர்
அழகிய மெல்லிய குரல்.
அப்போது
தன் நினைவலைகளை விட்டு வெளியே வந்தவனாய், சற்றே திரும்பிப் பார்க்க,
அத்தனை அழகையும் தனக்குள்ளே புதைத்தாற் போல, சிறிது வெட்கத்தோடு ஓடி
மறைந்தாள் அந்தப் பெண். பின் பெரியவர் சொன்ன திசை நோக்கிச் சென்று வீட்டை
அடைந்தான்.
செண்பகம் பாட்டி வெளியே வந்து, தன் தளர்ந்த குரலில்,
'தம்பி... யாரப்பா?'
'பாட்டி, நா... நான் தான் பாட்டி...', என்ற கணம், செண்பகம் பாட்டி கண்களில் மடை திறந்தாற் போல்,
'ஏய்யா? என்னய்யா? இவ்ளோ காலம்?', என்று கட்டித் தழுவிக் கொண்டாள்.
ஒவ்வொரு நாளையும் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து கொண்டிருந்த
செழியன்
,
'தேன்மொழி, கொஞ்சோ த
ண்ணி புள்ள' என்ற கிராமத்து மணம் உடல் எங்கும் வீசுபவனாய், வயலில் உழுது கொண்டிருந்தான்
.
'வந்துட்டேன் மாமா', என்ற
குரல், வெட்கத்தோடு அன்று ஓடிய அதே பெண்ணின் குரல்.
அன்று
தான்
,
தான்
அருந்திய நீரில், தன் பெயருக்குரிய செழிப்பையும் அடைந்தவனாய், தன் கண் துடைத்து வேலையைத் தொடர்ந்தான்
செழியன்.
________________________________________________________________________________
- ராதா